Thursday, March 13, 2008

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!
- மஞ்சை வசந்தன்

கடவுள் வாழ்த்து என்பது சரியா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருக்குறள் (1)

எழுத்துக்களில் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல், உலகம் ஆதிபகவனைக் முதலாகவுடையது என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்று சிலரும், இறைவன் என்று சிலரும் பொருள் கூறி முறையே, கடவுள் வாழ்த்து என்றும் இறை வாழ்த்து என்றும் இந்த அதிகாரத்திற்குத் தலைப்பு சூட்டியுள்ளனர்.

ஆனால், இவ்வதிகாரத்திலுள்ள குறட்பாக்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இவ்வாறு பொருள் கொள்வது சரியன்று என்பது தெளிவாக விளங்கும்.

இதே அதிகாரத்தில்,

“தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - திருக்குறள் (7)

தனக்கு உவமை இல்லாதது கடவுள் (இறை) என்றால் உவமையில்லாத கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறள் எப்படி அமைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பின் அது மேற்கண்ட குறளுக்கு முரண் அல்லவா? அப்படியென்றால், உவமையில்லாத கடவுளுக்கு உவமை கூறி, முதல் குறள் அமைக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.

அதன்படி நோக்கின் முதல் குறளுக்கு உண்மையான வேறு பொருள் இருக்க வேண்டும். அந்த உண்மைப் பொருள் என்னவாக இருக்கும்? அதை அறிய, ஆதிபகவன் கடவுளைக் குறிப்பதா? அல்லது வரலாற்றில் வாழ்ந்த தலைவரைக் குறிப்பதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். வரலாற்றுச் சான்றுகளின் படியும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் (இடபதேவர்) ஆவார். அவருக்குப் பின் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தமையால், முதல் தீர்த்தங்கரர் ஆகிய இடபதேவருக்கு “ஆதிபகவன்” என்று பெயர் வந்தது. இது வரலாற்று உண்மை.

இவர்தான் முதன் முதலில் உலகுக்கு எழுத்துக்களைக் கற்பித்தார் என்பது சமணக் கொள்கை. அதன்படி நோக்கின், ‘அ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட அனைத்து எழுத்துக்களும், ஆதி பகவனை மூலமாகக் கொண்டவை என்பது பொருள்.

அதாவது ‘அ’ முதலிய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனை முதலாக உடையன “ஆதி பகவனிடமிருந்து வந்தவை) என்பதுதான் இக்குறளுக்குப் பொருள். இதுவே சரியான பொருள். அப்படிப் பொருள் கொள்ளும் போது, முரண் ஏதும் இல்லாத, வரலாற்றுக்கிசைந்த, சான்றுகளுடன் கூடிய பொருளாக அது அமையும். இங்கு ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, இக்குறளுக்கு உலகில் அகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிபகவனிடம் தோன்றியது என்பதே சரியான பொருள் ஆகும். அதாவது, உலகுக்கு அறிவை வழங்கியவர் ஆதிபகவன் என்பது இக்குறளின் நுண்பொருள்.

எழுத்துக்களையும், எண்களையும், உழவித் தொழிலையும், உலகுக்குக் கொடுத்தவர் (கற்பித்தவர்) ஆதிபகவன் என்பது சமணர் கொள்கை. இம்மூன்றும் அவரே மூலகர்த்தாவாகக் கொள்ளப்பட்டார். அவரே எண்ணின் மூலம், அவரே எழுத்தின் மூலம். அவரே உழவின் மூலம் என சமணர்களால் போற்றப்பட்டவர் என்பதை ஆய்வில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் போன்ற உரையாளர் இக்குறளுக்கு உரை எழுதும் போது, ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ எழுத்தே அடிப்படை; அதிலிருந்தே மற்றய எழுத்துக்கள் பிறக்கின்றன. அதுபோல், கடவுள் உலகத் தோற்றத்திற்கு அடிப்படை என்று பொருள் கொள்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது முற்றிலும் சரியன்று.

காரணம், எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கு ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று.‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்து தோன்ற ‘அ’ எழுத்து அடிப்படையாக அமைவதில்லை.

“அகரம் ஏனைய எல்லா எழுத்துக்களோடும் நுண்ணியதாக கலந்தும், எல்லா மெய் எழுத்துக்களையும் இயக்கியும் நிற்றல் போல், இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராயும், உயிரற்ற பொருட்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன்” என்பது இக்குறளின் பொருள் என்கிறார். பாவாணரின் இக்கருத்து முற்றிலும் சரியன்று.

‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்?
‘அ’ என்பதும் உயிர் எழுத்து.
‘உ’ என்பதும் உயிர் எழுத்து.

இரண்டும் தனித்து நிற்கவல்லன. அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டுமே கலக்கும். ஒவ்வொரு உயிரும் மெய்யெழுதுடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வதும்; கூறுவதும் எப்படிச் சரியாகும்?

‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை; கலந்திருப்பதை அறிய முடியவில்லையே.
க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்?

எந்தவொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது வாய் திறந்திருக்கிறோம். வாய்த் திறந்தாலே அங்கு ‘அ’ என்பது நுண்ணியமாய் ஒலிக்கும். எனவே, எல்லா எழுத்துக்களிலும் ‘அ’ நுண்மையாகக் கலந்துள்ளது என்று கூறலாம் எனச் சிலர் கருதுவர். அங்காந்த வாயே அகரத்தின் இடமாயினும் (தொல்காப்பியப்படி), வாய்ந்திறந்தாலே ‘அ’ ஒலிப்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. எழுத்தை நினையாது வாய்த்திறந்து பார்த்தால், ‘அ’ ஒலிப்பதைத் தோன்றிய தோற்றங்கூட இருக்காது.
வாய்த்திறப்பதால் ஒலி எழுவதில்லை. அணு அளவாவது ஒலிப்பதற்குரிய முயற்சி மேற்கொண்டால் தான் ஓசை எழும். இல்லையேல் எழாது என்பதே உண்மை. வாய்த்திறந்து ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

“நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் உச்ச
மூக்கற் றிதழ்நா பல்வணத் தொழியின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரங்பிறப்பே”
- நன்னூல்

எனவே, ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கூறுவது சரியன்று.

அதன் வழி நோக்கின், ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைவதாய்ப் பொருள் கூறுவது பொருந்தாது.
அதேபோல் ஆதிபகவன் என்பதை இரு பெயரெட்டுப் பண்புத் தொகை என்று பரிமேலழகர் கொள்வதும் சரியன்று.
அதாவது, ஆதி எனினும் கடவுள், பகவன் எனினும் கடவுள் எனவே, கடவுளைக் குறிக்கும் ‘ஆதி’ என்ற பெயரும் பகவன் என்ற பெயரும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று எனப்து பரிமேலழகர் விளக்கம்.

இது பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது ஒரே பண்பை கொண்ட இரு சொற்கள் ஒட்டி இருந்தால் மட்டுமே பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ‘சாரைப்பாம்பு’ சாரையன்றாலும் பாம்பு என்றாலும் ஒன்றேயாகும். இங்கு சாரை, பாம்பு என்று சொற்கள் ஒட்டி இரு பெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

ஆனால், ‘ஆதிபகவன்’ எனபதில் ஆதி என்பதும் பகவன் என்பதும் வெவ்வேறு சொற்கள். ஆதிமூலம் இரு பெயரொட்டு பண்புத்தொகையாகின்றன. ஆனால், ஆதிபகவன் என்பதில் ஆதி என்பதற்குப் பொருள் வேறு. பகவன் என்பதற்குப் பொருள் வேறு.ஆதியாகிய பகவன் என்று அது விரியாது. காரணம், ஆதிபகவன் என்பது காரண இடுகுறிப் பெயராய் அமைந்து, ஒரு பெயராய் ஆனதாகும்.

மேலும் பரிமேலழகர், பதவுரை கூறும்போது ஆதி பகவனாகிய என்று விரித்துப் பண்புத் தொகையாக்குகிறார். கருத்துக் கூறும்போது ஆதியாகிய பகவன் என்று விரித்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக்குகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாறு ஏன் அவர் செய்கிறார் என்றால், ‘ஆதி பகவன்’ என்பதை இரு பெயரொட்டு பண்புத்தொகையாக்குவதன் மூலம், ஆதிபகவன் என்ற சொல்லைக் கடவுளுக்குப் பொருத்திக் காட்டலாம் என்பதற்காகவே, அதாவது, ஆதி என்றாலும் கடவுள், பகவன் என்றாலும் கடவுள், கடவுளைக் குறிக்கும் இவ்விருப் பெயர்களும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று என்று கூறுவதன் மூலம், இக்குறளைக் கடவுள் மயமாக்கிவிடலாம் என்ற முயற்சிதான். ஆனால், இது தவறு என்பதை விளக்குவதற்காகத்தான் மேலே விரிவாக விளக்கினேன்.

இருபெயரொட்டுப் பண்புத் தொகையென்றால் ஆதிப்பகவன் என்று இருக்கவேண்டும். காரணம் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும். ஆனால், குறளில் ஆதிபகவன் என்றெ உள்ளது. ஆகவே, அது இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல என்பது உறுதி செய்யப்படுவதை அறிய வேண்டும்.

ஆதிபகவன் என்றால் வாழ்ந்த தலைவர்களுள் ஆதியானவர் என்பது மட்டுந்தான் பொருளேயன்றி, அவர் உலகத்திற்கு மூலமானவர் அல்ல.எனவே, ஆதிபகவன் என்பது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவருக்குப் பொருந்துவதேயன்றி, புலனாகாத கடவுளுக்குப் பொருந்துவதன்று.

மேலும், எழுத்துக்கள் உருவானது அருக தேவனாகிய ஆதிபகவனிடம் என்று பொருள் கொள்ள ஆதாரங்கள் உள்ளன.

“விறுப்புறு பொன்எயிற்குள்
விளங்குவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

என்று மண்டல புருடர் தம் “சூடாமணி நிகண்டில்” 4ஆவது தொகுதியிலும்,

“கோதில்வருகன் திகம்பரம் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்று கயாதர நிகண்டிலும், அருகதேவரே ஆதிபகவன் என்பதும், அவரே எழுத்துக்களை உலகிற்குக் கற்பித்தார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘எண்குணன்’, ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’ என்பவை அருகதேவரையே குறிப்பன என்பதையும் மேற்கண்டவர்கள் உறுதி செய்கின்றனர்.

மேலும், “ஆதிபகவனை அருகனை” என திருக்கலம்பகம் (செய்யுள் 109) சுட்டுகிறது. எனவே ஆதிபகவன் என்பது அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

எனவே முதல் குறளுக்கு, உலகில் அகரத்தை முதலாகவுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனிடமிருந்து தோன்றியவை என்பதே பொருள். அறிவை உலகிற்குத் தந்தவர் ஆதிபகவன் என்பதே அதன் உட்பொருள்.

முற்றும்.


(இக்குறளுளைப் பற்றிய என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை.